மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Wednesday 17 December 2014

8. யம லோகத்திற்கு போகும் வழி

ஸ்ரீ வேத வியாச முனிவரின் மாணவரான, சூதபுராணிகர் நைமிகாரணியவாசிகளான மகரிஷிகளை நோக்கி,  “அருந்தவ முனிவர்களே கருடாழ்வான். திருமகள் கேள்வனைப் பணிந்து வணங்கி, ‘சர்வலோக நாயகா! யமலோகம் என்பது இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அதன் தன்மை யாது? அவற்றைத் தயை செய்து கூறியருள வேண்டும்...’ என்று கேட்கவும், கருணைக் கடலான கார்மேக வண்ணன், கருடனை நோக்கிக் கூறலானார்.
                   
“கருடனே! மனிதர்கள் வாழும் மானுஷ்ய லோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம்( 1காதம் =7km ) இடைவெளியுள்ளது.                     அந்த யம லோகத்தில் யெழும் எமதர்மராஜன் கூற்றவன் உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படியாகத் தன் தூதர்களிடம் கூறுவான். 

“விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான். வாழ்நாள் முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குச் செல்வார்கள். ஆவி உருவ உயிர்களை யமபுரித் தலைவன் கால தேவன் முன்னால் நிறுத்துவார்கள்.

“அவர் அத்தூதர்களை நோக்கி, “ஏ கிங்கரர்களே! இந்த ஜீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் சபை முன்பு நிறுத்துங்கள்.” என்று கட்டளையிடுவான்.

 “உடனே ஒரு நொடி நேரத்திற்குள் சீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஆவி வடிவுடைய அந்த உயிர் சுடுகாட்டிலே தன் சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, ‘அந்தோ! ஐயையோ...!’ என்று ஓலமிட்டு அழும்.

“தீயிலோ உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது தன் உறவு பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது. அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று, அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ‘ஆ..ஆ...’ என்று கதறி பதறி நிற்பான்.

“ஜீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும். புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உண்டாகும்.
பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பாசத்தால் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான். 

“பிண்ட சரீரம் பெற்ற உயிர், யம கிங்கரர்களால் பாகத்தால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி இரவுபகலுமாக நடந்து செல்ல வேண்டும். அவன் போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்ட ஜீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான்.

“வைவஸ்வத பட்டணம் என்ற பட்டணமுண்டு. அங்கு அச்சம் தரும் மிகவும் கோரமான பிராணிகளுக்கு இருப்பிடமாகவும் துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும். பாபம் செய்தவர்கள் மிகப் பலர் எப்போதும் ‘ஆஊ...’ என்று ஓலமிடுவார்கள்.

“அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும். குடிக்க ஒரு துளித் தண்ணீர் கூடக் கிடைக்காது. அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக இருக்கும். ‘நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன். ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன். அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன். மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேன்.’ ஜீவனின் ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் அவனைத் துன்புறுத்த, அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்!” என்று திருமால் கூறியருளியாதகச் சூதபுராணிகர் கூறினார்.



தானங்கள்

வே, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர்.

உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிராமணர்களுக்கு அளித்தல் வேண்டும்.


ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில்  அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும். அதை பற்றி பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம். 

Sunday 14 December 2014

07. தான தருமங்களும் விருஷோற்சனமும்

வேத வடிவனாகிய கருடன், சர்வலோக நாதரான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி, “ஹே பரமாத்மா!  ஒருவன் மனத்தூய்மையோடு தானதர்மங்களைத் தன கையாலே செய்வானாயின், அதனால் அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான தர்மம் செய்பவர்களானால் அதனால் உண்டாகும் பயன் என்ன? இவற்றைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்!” என்று விண்ணபஞ் செய்ய பாம்பணையில் துயிலும் பரமாத்மா கூறலானார்.

“கருடனே! மனத்தூய்மை இல்லாமலும், மனவுறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ?

அதனை சித்த சுத்தத்தோடு சாஸ்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை நல்லவருக்கு தானம் செய்தால், அதன் பயனும் கிடைக்கும். கோதானம் கொடுப்பவரும், வாங்குபவரும் மனத்தூய்மை உள்ளவராகயிருக்க வேண்டும். வாங்குபவர் உத்தமராக இருக்க வேண்டும். கற்றுணர்ந்த சான்றோருக்குக் கொடுக்கப்படும் தானம், தானம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் புண்ணியமுன்டாகும்.

“வேத சாஸ்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை மட்டும் கொண்டவனுக்கு தானம் கொடுத்தால், அந்த தானமே தானங் கொடுத்தவனுக்கு நரகத்தைக் கொடுக்கும். மேலும் தானம் வாங்குவதற்கே தகுதியில்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தோரு தலைமுறை உள்ளவர்களோடு நரகம் புகுவான்.
                                                           
“ஒரு பசுவை, ஒருவருக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்லப் பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் கொடுத்தவன், அந்தப் பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனைச் சந்தேகமின்றி அடைவான்.

“தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால் ஏதாவது ஒருபொருளைக் கொடுத்தாலும் போதுமானது. கருடா! மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியைப் பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்.” என்று ஸ்ரீமந் நாராயணர் கூறியருளினார்.


Thursday 11 December 2014

06. பிரேத ஜென்மம் நீங்க வழி

கருடாழ்வார் ஸ்ரீமந் நாராயண பகவானைத் தொழுது, “வைகுண்ட நாதரே! மனிதர்களுக்கு மிகவும் கொடியதான பிரேத ஜென்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என்பதை தேவரீர் தயவு செய்து கூறியருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.” என்ற கருடனை நோக்கி ஸ்ரீமந் நாராயணன் கூறலானார்.
                                          
“ஒ கருடா! மனிதர்கள் இறந்தவுடன், பிரேத ஜென்மத்தை நிவர்த்திக்க விரும்பிய யாவரும், ஐந்து வயதுக்கும் மேற்பட்ட யார் இறந்தாலும், அவருக்கு பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்க, கர்மம் செய்பவன் விருஷோற்சர்க்கம் செய்தல் அவசியம்.

“இந்தக் கருமத்தைத் தவிர வேறு கர்மங்கள் செய்வதற்கில்லை. இறந்தவருக்கு பிரேத ஜென்மம் வருவதில்லை. இறந்தவர்களுக்கு இறந்த பதினொன்றாம் நாள் விருஷோற்சனம் என்ற கர்மங்கள் தன் புத்திரனாவது, மனைவியாவது ஆண், பெண் வயிற்றுப் பிள்ளையாவது, பெண்ணாயினும் செய்யலாம். ஆனால், புத்திரன் செய்வது தான் சிறந்தது. கர்மம் செய்யாமல் சிரார்த்தம் மட்டும் செய்வதால் எந்த பலனுமில்லை.

“பிள்ளையில்லாமலும், பெண்ணில்லாமலும் ஒருவர் இறந்து, உரிய உத்திரக் கிரியைகளைச் செய்யாமல் விட்டுவிட்டால் அவன் இரவு பகலாக பசியோடும், தாகத்தோடும் ‘ஐயையோ....!’ என்று கூச்சல்லிட்ட வண்ணம் உலகமெங்கும் நெடுங்காலம் வரை அலைந்து, திரிந்து பிறகு புழுக்கள், கிருமிகள் முதலிய ஜென்மங்கள் எடுத்து, பிறந்து பிறந்து மரிப்பான்.

“யாருமேயில்லாதவன் உயிரோடிருக்கும் போதே சாவதற்கு முன்பாக, நற்கர்மங்கள் செய்யக் கடவன்...” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.


Wednesday 3 December 2014

சித்ரகுப்த கோயில்

காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். சிறிய கோயில் தான். உலகிலேயே சித்திர குப்தனுக்கு கோயில் இருப்பது இங்கு தான் என்பது குறிப்பிட தக்கது.

சித்ரகுப்தன்

பெரும்பாலான மக்களால் ஒருவித பயத்தோடு பார்க்கப்படும் எமலோகத்தில், மனிதர்களுக்கான கணக்கு- வழக்கை பார்ப்பவர் சித்ர குப்தன், இவர் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்றுதான். அதனால்தான், இவருக்கு சித்ர குப்தன் என்ற பெயர் ஏற்பட்டது.

பூலோக வாழ்வை முடித்துக் கொள்ளும் உயிர்கள் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வதாக பெரும்பாலான பேர் நம்புகிறார்கள்.

ஒவ்வொருவரும் செய்கின்ற பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, அவர்கள் செல்வது நரகமா? அல்லது சொர்க்கமா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது நம்பிக்கை. யார் என்னென்ன புண்ணியம் செய்தார்கள்? பாவம் செய்தவர்கள் யார்-யார்? இதற்கெல்லாம் ஒரு கணக்கு-வழக்கு வேண்டும் அல்லவா? அதை, கவனிப்பவர்தான் சித்ரகுப்தன்.

ஆரம்பத்தில் எம தர்மராஜா தான் இந்த கணக்கு-வழக்கை எல்லாம் பார்த்து வந்தார். அவரது வேலைப்பளு அதிகமானதால் சிவபெருமானிடம் சென்று தனக்கு உதவியாளர் ஒருவர் வேண்டும் என்று கேட்டார்.சிவபெருமானும் ஒரு சித்திரத்தை வரைந்து கொடுத்து, இவனைப்போல் ஒருவனை படைக்குமாறு பிரம்மாவை கேட்டுக் கொண்டார்.

பிரம்மாவும் அதன்படியே ஒருவனை சித்ரா பவுர்ணமி நாளில் படைத்தார். அவரே சித்ரகுப்தன். நரகலோகம் செல்லும் மனித உயிர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுவதாக கூறுகிறது கருட புராணம்.

அடுத்தவன் மனைவியை அபகரித்துக் கொண்டவர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கப்படுவார்கள்...

கொலை செய்தவர்கள் உலக்கையால் அடித்து, பாழுங்கிணற்றில் தள்ளப்படுவார்கள்...

மனைவிக்கு துரோகம் செய்தவர்களின் இரண்டு கண்களும் பிடுங்கப்படும்... - இப்படி பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்று பட்டியலிடுகிறது கருடபுராணம்.

ஒருவரது உயிர் செல்ல வேண்டியது சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்காக? என்பதை எம தர்மராஜாவிடம் எடுத்துரைக்கும் சித்ரகுப்தன், சற்று குள்ளமான வடிவம் கொண்டவர். வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஒரு ஏட்டையும் தாங்கி, வலது காலை ஊன்றியபடியும், இடது காலை மடித்து அமர்ந்தபடியும் காட்சித்தருவார்.


சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும், நரகத்தில் குறைந்த பட்ச தண்டனை வேண்டும் என்றாலும், இவர் அருள் ஒருவருக்கு இருந்தால்தான் முடியும்.

சித்ரா பவுர்ணமி அன்று இவரை மனம் உருகி வழிபடுவதன் மூலமும், செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்வதன் மூலமும், எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யாது இருப்பதன் மூலமும் அவர் அருளை எளிதில் பெறலாம்.

Monday 1 December 2014

05. அரிதினும் அரிது மானுடப் பிறவி!

“பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்கள் உள்ளன. அவை அண்டகம், உற்பிசம், சராவுசம், சுவேதசம் என்று நான்கு வகையில் உள்ளன.

“அண்டகம் என்ற வகையில் முட்டையிலிருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் தோன்றின. உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி, தாவர வகைகள் தோன்றின. கருப்பப் பையிலிருந்து தோன்றுவதான சிராயுசம் வகையில் இருபத்தோரு லட்சம் மனிதர்கள் தோன்றினர்.
வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில்  இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன.

“கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். எல்லா விதத்திலும் மானிடப் பிறவியே சிறப்புடையது. புண்ணியத்தால் அடைந்த மானுடப் பிறவியால் பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள். 

“மண், பொருள், ஆசைகள் எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து தன் மனசாட்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவான்.

“இதனால் அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழ்வும் வளராது. அளவில்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, நம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள்.

“ஆசைக்கு அடிமையானவர்கள் வயோதிகப் பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணித்து, ‘கிழப் பிணமே!  வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட!’ என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு,  மனம்பொறுமிக்கிடப்பான்.ஆகையால் கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனேயானாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பொண்ணுக்கு அடிமையாகி கிடப்பான்.
                                         
“கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை. இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எது அதிகமாயினும் பெண்டுபிள்ளைகள் அதிகமாகிப் பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதியடைய மாட்டான்.

“உலகில் மனிதன் பிறந்து பிறந்தே இறக்கிறான்.ஆசைகளால் நோயுற்று மாண்டு விடுகின்றான். ஒருவரும் தனக்கு துணையில்லாமல் ஒருவனாகவே யாருக்கும் சொல்லாமல் மடிந்து போகிறான். பொய்யான பத்திரங்கள் எழுதி பொய் சொல்லி, ஏமாற்றி, வழிப்பறி, கொலை புரிந்து, தீயச் செயல்களைச் செய்து, தான் சேர்த்த பொருள்களை, உரியவருக்கு அளித்து, பழி பாவங்களோடு போகிறான்.


“அவன் மனைவி மக்கள் பாவங்களில் பங்கு ஏற்றுக் கொள்வாரில்லை. முக்திக்குச் சாதனமான, தவம், தருமம், தானம் செய்து, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை செய்வதே உத்தமமாகும்.” இவ்வாறு ஸ்ரீ நாராயணர் உணர்த்தியருளினார்.

Monday 24 November 2014

உடம்பு - சில புள்ளி விவரங்கள்

வீன விஞ்ஞானம் கூட தடுமாறக்கூடிய உடலைப் பற்றிய விளக்கங்களை, கருடபுராணம் துல்லியமாய் நம் கண் முன் வைக்கிறது.

உடம்பில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உரோமங்கள், தலையில் எழுபது இலட்சம் உரோமங்கள், இருபது நகங்கள், முப்பத்திரண்டு பற்கள் உள்ளதாகவும், மனிதனின் உடம்பில் உள்ள மொத்த தசையின் எடை ஆயிரம் பலம், இரத்தம் நூறு பலம், கொழுப்பு பத்து பலம், தோலின் எடை ஏழு பலம், மஜ்ஜையின் எடை பன்னிரெண்டு பலம், மிகவும் உயர்ந்த இரத்தம் மூன்று பலமும் உள்ளதாக கூறுகிறது.

நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கூறப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களை, நவீன மருத்துவம் முழுமையாக கூற முடியாமல் இன்றும் எல்லாவற்றிக்கும் ஒரு சராசரியான அளவைத் தான் கூறி வருகிறது.


(ஒரு தோலா- பத்து கிராம் (வடஇந்திய நகை கடைகளில் இந்த தோலா அளவு இன்றும் சொல்லப்படுகிறது), மூன்று தோலா = ஒரு பலம், ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம், அதாவது ஒரு பலம் என்பது 6/5 அவுன்ஸ்)

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே.... 02. அந்ததாமிஸ்ரம்

ணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரையொருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும், மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள் சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

Sunday 23 November 2014

04. பறவை வேந்தனான கருடனின் கேள்வி.

றவை வேந்தனான கருடன், ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, “ஒ ஜெகன்னாதா! பரந்தாமா! ஸ்ரீ ஹரியே! உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்? என்ன காரணத்தால் சுவர்க்க நரகங்களை அடைகிறார்கள்?. எந்தப் புண்ணியத்தைச் செய்தால், இன்ப வீடான தேவர்களின் உலகை அடைவார்கள். எத்தகைய கர்மங்களால் பாவங்கள் நிவர்த்தியாகும். இறக்கும் வரை யாரை நினைத்தால் நற்கதி கிடைக்கும்? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகக் கூறியருள வேண்டும்” என்று வேண்டினான்.
                           
ஸ்ரீ மந்நாராயணர் எல்லோர் மனதிலும் புகுந்து அனைத்தையும் பார்க்க வல்லவரும், எல்லா செயல்களுக்கும் காரணமாகியவருமான ஸ்ரீ ஹரி  புன்னகையுடன் பறவை வேந்தனை நோக்கிக் கூறலானார்.
                         
“கருடனே! நீ நல்லதொரு கேள்வியை நல்ல முறையில் கேட்டு விட்டாய். அது உலகினருக்குப் புரியாத ரகசியங்கள். அவற்றை நாம் கூறுவோம். கவனமாகக் கேள். எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது இறப்பது நிச்சயம் என்பதை யாரும் நினைப்பதில்லை.

"உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றவன்(எமன்) என்றும் விடமாட்டான் என்ற உண்மையை உணர்ந்த மனிதன் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி அறநெறிப்படி வாழ்வான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும். தனக்குரிய கர்மங்களை எவன் ஒருவன் முறைப்படிச் செய்கிறானோ, அவனே எல்லாவிடத்திலும் மேன்மையடைவான்.
                          
“பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். பிராமணருக்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன.

“ஷக்த்திரியருக்கு ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயித்றல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு.

“வைசியருக்கு ஓதல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏரூழல் என ஆறு கர்மங்கள் உண்டு.

"சூத்திரருக்கு ஓதல், முன்னவருக்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாதல், வேட்டல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு.


"அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கபடி நடப்பதே பெரிய தவமாகும். அதில் வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து நெடுநாள் வாழ்ந்து,  இறுதியில் தமக்குரிய உலகை அடைவார்கள். அவாவை ஒழித்த பற்றற்றவர்களே பேரறிஞர்களாவர்.” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.